

நில் ..நிதானி.. செயல்பாடு !
நம் நிஜ வாழ்கையில் மிகவும் கடினமானதும் , சுலபமானதும் எது தெரியுமா? நம் சக மனிதர்களை இனம் கண்டு கொள்ளவதுதான் . சிலரை பார்த்தவுடன் ஊகிக்க முடியும் , சிலரை பேச விட்டு ஊகிக்க முடியும். ஆனால் இவையெல்லாம் வேறு ஊகங்களே உண்மை வேறு ! அறிமுகத்திற்கு முன்னரே தவறான செய்திகளால் சிலரை பற்றி இவர் இப்படிதான் என்கின்ற எண்ணத்தோடு பழகும்போது அவர்களை பற்றி அறிவதற்கான வாய்ப்பை நாமாக இழக்கின்றோம் . அவர்களை பற்றிய கண்ணோட்டம் தவறாக இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களை பிடிக்காதவர்களாக ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அவர்களை பார்கின்றோம் . அவர்கள் ஏதேனும் தவறு செய்கிறார்களா என்று பூதகண்ணாடி கொண்டு பார்கின்றோம். இதற்காக நன் நேரத்தையும் கூடவே அறிவையும் செலவிடுகின்றோம் .
நாம் முதலில் இயல்பாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் . மனிதரிடத்தில் பழகி , அவர்களின் குணத்தை கண்டறிந்து அதற்க்கு ஏற்ற படி நடந்து கொள்ள வேண்டும் . முகம் மலர்ந்து நம்மிடத்தில் பேசும் சிலர் திரை மறைவில் சதிகளையும் அரங்கேற்றுவதுண்டு . நம்மிடத்தில் அவர்கள் பேசும் போது இவரைப்போல நல்லவரில்லை என்ற நம்பிக்கை கொள்ள செய்வதுண்டு . இதன் காரணமாக நம்முடைய பல நெருக்கமான விசயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்வதுமுண்டு . இந்த பகிர்தலில் நமக்கு பாதகமான சில விசயங்களும் கூட உண்டு . எல்லாவற்றையும் நம்மிடத்தில் கேட்டு விட்டு , அதை எவரிடம் சொன்னால் பிரச்சனை முளைக்குமோ அவரிடமே சொல்லி நம்மை சிக்கலில் மாற்றிவிடுவார். இதை நாமும் பலருக்கு செய்ததுண்டு. ஆக நெருங்கிய நண்பர்களிடமும் சற்று கவனமாய் இருத்தல் உண்மையில் நலமே.
எனக்கு பரிச்சயமான ," உறுதியான " மனிதரிடம் என் வாழ்கை பகிர்வுகளை மிகவும் எதார்த்த மனதோடு கூறியபோது அவர் அந்த தருணத்தில் சொல்லி . அன்பாய் பேசி விட்டு வேறொருநாள் நால்வர் முன்னிலையில் எனது தனிப்பட்ட விசயங்களை சபை ஏற்றிய பொது உண்மையில் எனக்கு வந்த கோபம் அவர்மேல் அல்ல, என்மேல்தான் .
இதுபோல முரண்படுகின்ற மனிதர்களை பார்க்கும்போது எச்சரிக்கையோடும் , அதிகம் பேசாமல் நிதானத்தோடும் இருப்பதும் நம்மை அவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ளும் . இதற்க்கு மாறாக நம்மிடம் பழகும் அணைத்து மனிதர்களிடமும் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் . அவை நமக்கு வெற்றிக்கான வழியை கொடுக்கும் . நாம் ஒவ்வொருவரும் வெற்றியை தொடும் போது தோல்வி பற்றிய எச்சரிக்கை உணர்வோடு இருத்தல் வேண்டும்.
உண்மையில் எனக்கும் நிதானத்திற்கும் சற்று தொலைவு இருக்கத்தான் செய்கிறது . துரோகங்களையும் இழப்புகளையும் சந்திக்கும் போது எழுகின்ற கோபங்களும் , ஆத்திரங்களையும் நான் உடனடியாக தவிர்க்க வேண்டும் . சில பிரச்சனைகளை ஆற போடுவதால் அதன் வீரியமும், வலிமையையும் குறைந்துவிடும் . அவ்வாறாக வீரியம் குறைந்த பிரச்சனைகளை நாம் எளிதில் வெல்ல முடியும் . மாறாக பிரச்சனைகளை கண்டு over react செய்வதால் அவற்றின் பலம் அதிகரித்து நம்மை பதம் பார்ப்பதும் உண்டு. சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் வருகின்ற உணர்சிகள் துன்பங்களை தருமே தவிர தீர்வுகளை அல்ல.
நாம் அனைவரும் ஒரு எதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும் . யாவருக்கும் நல்லவராய் இருத்தல் இயலாத ஒன்று. ஒரு சாராரிடம் கருத்தொருமித்து பழகும்போது அது மற்றவர்க்கு நம் மீது அதிர்ப்தியை கொடுக்குமே தவிர ஆதரவையோ , அங்கீகாரத்தையோ அல்ல . நிசத்தில் இதுதான் இடியாப்ப சிக்கல் . அணைத்து தரப்பையும் திருப்தி படுத்த எக்காலமும் இயலாது . எவராலும் முடியாது. ஆக முடிந்தவரை இயல்பாய் இருத்தல் நலம் .
இதுவரை நாம் வாழ்ந்த வாழ்கையில் நாம் புரிந்து கொண்ட விஷயங்கள் சிலவே , நமக்கு விளங்காமல் கடந்து போன விசயங்களும் இங்கு நிறையவே உண்டு. அவைகளை மீண்டும் சந்திக்க ஆசை பட வேண்டும் . நம் சிரிப்புகள் மகிழ்ச்சியின் அடையாளம் ! அழுகைகள் வருத்தத்தின் அடையாளம் ! அதை போல நம் தவறுகள் குழப்பங்களின் அடையாளம் . இந்த குழப்பத்திற்கான தீர்வுகள் நம் கைகளில் . தீர்வில்ல தவறுகள் என்பவை இன்னும் செய்யாத தவறுகள் மட்டுமே . எல்லோரிடம் தவறு செய்தல் என்ற குணத்தில் ஒற்றுமை உள்ளது ! இது எல்லோரிடமும் இருக்கும் இயல்பான , பொதுவான ஒன்று. நாம் செய்த தவறை உணர்ந்து எவ்வளவு விரைவாக சுதாரிகின்றோமோ அதை பொறுத்தே நம் வெற்றிகள் தீர்மானிக்க படுகின்றது . மாறாக நம் தோல்விகளை நம் எதிர்கள் தீர்மானிபதில்லை. நாம்தான் நமது தோல்விகளின் முழுமுதற் காரணம் ! ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இன்னொரு மனிதனை எதிரியாய் வளர்த்து வருகின்றான் . சில சமயங்களில் சக மனிதர்களையும் எதிர்களை சம்பாதிக்கிறான் . துன்பத்தில் சிக்குகிறான் ! அழுகின்றான் ! பிறரை சாடுகின்றான் .
நம்மால் நமக்கு தோற்றுவிக்கபடும் அணைத்து துன்பங்களுக்கும் நாம்தான் காரணகர்த்தா ! ஆக நமக்கு வரும் துன்பங்களை தவிர்க்க முடியாது , வேண்டுமென்றால் அதன் அளவை குறைத்து கொள்ள முடியும் . இதற்கெல்லாம் தீர்வு நிதானமும் , விழிப்புணர்வும்தான். இந்த இரண்டையும் நாம் மறக்கும்போது நம்மை தோற்கடிக்கவும் , துன்பத்தில் தள்ளவும் நம் சக மனிதர்கள் காத்திருப்பது யாதார்த்தம் ! ஆக நில் ... நிதானி... செயல்பாடு
இரா. திருநீலகண்டன்